Shareholic

Monday, November 12, 2012

ஜெய ஜெய சங்கரா, ஹர ஹர சங்கரா


அந்த விடியற்காலை வேளையில்…. ஜெயகோஷத்துடனும், மாறாத நம்பிக்கையுடனும் யாத்திரை போய்க் கொண்டிருந்தது. மாசிமாத ஊதற்காற்று உடலில் ஊசியாய் இறங்கிற்கு. யானை, ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல நடுவில் பல்லக்கு அசைந்து வந்தது. பின்னே பக்தர் குழாம், நாகங்குடி, சாத்தனூர், பழையனூர், கிளியனூர் என்று வெண்ணாற்று வடகரையில் தொடர்ந்து கொண்டிருந்தது பயணம். அடுத்து மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி, தாண்டி நத்தம் வந்த பொழுது பிள்ளையார் கோவில் முக்கில் இரு ஊராய் பிரந்தது பாதை. பல்லக்கின் உள்ளிருந்து தண்டத்தால் பலகையைத் தட்டும் ஓசை கேட்டது. பல்லக்கு நின்றது. உள்ளிருந்த கை வலது பக்கப் பரிவில் போகச் சொல்லி சைகை செய்தது. அவர்கள் பயணத் திட்டப்படி இடது பக்கப் பாதையில் நெடுங்கரை வழியாக ஆத்தூரைக் கடந்து நாட்டியத்தான் குடி செல்ல வேண்டும். ஆனால் திடீரென்று உத்தரவு வேறு விதமாக வருகிறதே? என்று ஒன்றும் புரியாமல் திகைத்தது பின்னே வந்த கூட்டம்.

“ஏன் நிப்பாட்டியாச்சு?’ என்றார் வைத்தா.

“இல்லே; பிளான்படி அந்தப்பக்கம்னா போக….’ என்று முடிக்கவில்லை மகாலிங்கம்.

“நீரும், நானும் யாருங்கானும் பிளான் பண்றத்துக்கு? இந்தப் பக்கம் போகச்சொல்லி உத்தரவாச்சுன்னா, கண்ண மூடிண்டு, போய்த்தான் ஆகணும். ஒரு சின்ன அசைவுலையும் ஆயிரம் அர்த்தம் இருக்கும். காரண, காரியத்தை கேட்டுக் கொண்டிருக்கப்படாது. உமக்கும் எனக்கும் என்ன தெரியுமா? பின்னாடி தான் புரியும் எல்லாம்’ என்றார் வைத்தா தீர்மானமாக.

“இது எந்த ஊர் போற பாதை’?

“மண மங்கலம்!’

“யப்பா, யானை, ஒட்டகம், குதிரை எல்லாத்தையும் இந்தப் பக்கம் திருப்புங்கோ, பிரயாணம் இந்த மார்க்கமா போப்போறது!’ என்று அவர்குரல் கொடுத்ததும், இடது பக்கம் திரும்ப எத்தனித்த கூட்டம், வலது பக்கப் பாதையில் திரும்பிற்று.

அந்த அதிகாலைக் குளிருக்கு கட்டுண்டு சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தது ஊர். வழக்கம்போல விடியற்காலை எழுந்த வேம்பு அகல் விளக்குகள் இரண்டை ஏற்றி வாசல் பிறையில் ஒன்றையும், பக்கவாட்டில் இருந்த பெருமாள் கோவிலில் ஒன்றையும் வைத்தாள். வாளியிஷள் கை வைத்து சாணம் கரைக்க முடியவில்லை. அத்தனை ஜில்லிப்பு; மார்கழி, தை, எல்லாம் முடிந்து மாசியும் பிறந்து விட்டது. ஆனால் பனியின் உக்கிரம் இன்னும் குறையவில்லை. கை வளையலை மேலே ஏற்றிவிட்டுக் கொண்டு, நன்கு கரைத்து, வீட்டு வாசலில் நாலுகை, கோவில் வாசலில் நாலுகை தெளித்து, கட்டை விளக்குமற்றால் கூட்டும் பொழுது தூரத்தில் ஏதோ, புது அரவம் கேட்பது போலிருந்தது. “என்ன’ என்று கூர்ந்து அவதானித்தாள். ஒன்றும் விளங்கவில்லை.

சரி விடு என்று பரக்கப் பரக்க நாலு இழை வீட்டு வாசலில் இழுத்து விட்டு பெருமாள் பலிபீடத்தின்முன் கோலம் போட்டு, காவி எழுதி நிமிரும் போது வெகு அருகில் காலடி ஓசையும் குளம்பொலியும் துல்லியமாய் கேட்டது.

“என்னவாய் இருக்கும்?’ என்று எண்ணியபடியே மாவு சம்புடத்தை மூடித் திண்ணைக் குறட்டில் வைத்துவிட்டு நிமிர்வதற்குள், காட்சி பிரசன்னமாயிற்று. யானை, ஒட்டகம், குதிரைகள், பல்லக்கு, என்று ஒவ்வொன்றாய் வர… விக்கித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள் வேம்பு. பல்லக்கின் உள்ளிருந்து தண்டத்தால் மீண்டும் தட்டல். பல்லக்கு நின்றது. மீண்டும் ஒரு சின்ன தட்டில் கீழ் நோக்கி பல்லக்கு தரை இறங்கிற்று. மெல்லிய இரண்டு பாத கமலங்கள் வெளிப்பட்டன. வலது பாதத்தை முதலில் எடுத்த அழுந்த பூமியில் ஊன்றி, அடுத்து இடது பாதத்தைத் தூக்கி வைத்து காவிமுக்காட்டை சரிபண்ணியபடி தண்டம் ஊன்றி அந்தத் “திரு’ எழுந்து நிற்கவும் வேம்புவிற்கு பாதாதிகேசம் சிலிர்ப்பு ஓடியது. உடம்பே கிடுகிடுத்து, கால்கள் துவண்டும் இற்றும் போய்விடும் போல் இருந்தது. சிரமப்பட்டு வாசல் தூண் பிடித்து கீழிறங்கி “சர்வேசா’ என்று கதறியபடி நமஸ்கரித்தாள். கமல விரல்கள் “ஹஸ்த்தம்’ போல் காட்டி ஆசி வழங்கியதை எல்லாம் அவள் கவனிக்கவில்லை. எழுந்து பின்னாலேயே நாலுத்தப்படி நடந்து வீட்டு வாயிற்கதவு தள்ளி, உள்ளே கூடம்தாண்டி, காமிரா உள்ளினுள் ஓடி, கணவனை எழுப்பினாள். கலவரத்துடன் அவன் எழுந்து “என்ன, ஏது’ என்று கேட்டபொழுது.

“யானை, குதிரை, தெய்வம்; பெரியவா…’ என்று சொல்ல முடியாமல் திணறினாள். ஜன்னல் வழி வாசலில் எட்டிப் பார்த்த பொழுது காட்சி தெரிந்தது. மண்டைக்குள் உரைத்த பொழுது உடம்பு சிலிர்த்தது. ஓடிப்போய் கொல்லைக் கிணற்றில் நாலு வாளி இழுத்து தலையில் கொட்டிக் கொண்டு புதிது உடுத்தி, விபூதி தரித்து வருவதற்குள் அவன் மனைவி நிறைகுடமும் பூரண கும்பமும், ஆரத்திதட்டும் தயார் செய்து வைத்த விட்டாள். பாதபூஜை செய்து, கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து நமஸ்காரம் பண்ணி உள்ளுக்கழைக்கவும், பொழுது லேசாய் விடியவும் சரியாய் இருந்தது. அதற்குள் யானையின் பிளிறலும், குதிரைகளின் கனைப்பொலியும் தெருவையும், ஊரையும் எழுப்பிவிட்டு விட்டது. தீப்பிடித்தது போன்ற பரபரப்பு ஊருக்குள். “திக் விஜயம்’ செய்திருக்கும் செய்தி பரவ ஆரம்பித்ததும், ஜனங்கள் சாரி சாரியாய் வர ஆரம்பித்தனர். சுத்தமாய் அலசிவிடப்பட்டு கோலத்துடன் காய்ந்திருந்த பெரிய திண்ணையில் நட்ட நடுநாயகமாக வெறுந்தரையில் அமர்ந்துவிட்டது “பரபிரம்மம்’. பக்கத்துத் தூணில் தண்டம் சார்த்தப்பட்டிருந்தது. குளித்து, முழுகி ஈரத்தலையுடன் தெருமக்கள் பழத்தட்டு, பூக்குடலை ஏந்தி ஜோடி ஜோடியாய் வந்து தெண்டனித்துச் சென்றார்கள்.

யானை, ஒட்டகம், குதிரையெல்லாம் வெண்ணாற்றுப் பக்கம் ஓட்டிச் செல்லப்பட்டன. கூட வந்த குழாமிற்குத் தெரிந்து விட்டது. உடனடியாக இந்த இடத்தை விட்டுப் புறப்படப் போவதில்லை என்று, அடுத்தடுத்த திண்ணைகளில் மறைவாய் அமர்ந்து சிரமப் பரிகாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
“என்ன, ஸ்ரீமடம் இந்தப் பாதையில் வரப்போறதா தகவலே இல்லையே; எப்படி?’ என்றார் தெரு முக்கியஸ்த்தர் வைத்தாவிடம்.

“நெடுங்கரை பக்கமா அப்படித் திரும்பறதாத்தான் பிளான் என்னவோ கையகாட்டி இந்தப் பக்கம் உள்ள வரச்சொல்லி உத்தரவு வந்தது. வந்துட்டோம். ஏதோ முக்கியமான காரணமிருக்கும்’ என்றார் வைத்தி.

“ஏன் பெரியவா வாயத் தொறக்கவே மாட்டேங்கறா?’

“ரெண்டு நாளா “காஷ்ட்டிக மௌனம்’ இப்போ உபவாசமோ, விரதமோ கிடையாது. நம்ம பேச்சுக்கு ஓர் அர்த்தம்னா, அவா மௌனம்கறது ஆழ்கடல் போல ஆயிரம் அர்த்தம் இருக்கும் அதுக்கு; எப்போவேனா திருவாய் மலரலாம்.’

“ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, ஊர் எல்லையிருந்தே மேளதாளம், பூரண கும்ப மரியாதையோட அழைச்சுட்டு வந்திருப்பமே!’

“அதான் சொன்னேனே, நாம என்ன செய்ய முடியும்? அவாதிருவுளம் அப்படி, திடும்னு திரும்பியாச்சு, இப்படி!’

மாலியும், சேஷூவும் அலுக்காமல் கிராமத்தார் சந்தேகத்திற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்; ஸ்னானம், பூஜை, சாப்பாடு என்று எல்லாம் நியமமாய்நடந்தேரியது. “பரப்பிரம்மம்’ பசும்பாலும், உலர்திராட்சையும் மட்டும் ஏற்றுக் கொண்டது; மற்றவர்களுக்கு அடுத்தடுத்த வீடுகளில் தலை வாழை இலையில் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, பொரித்த அப்பளம், வடை, பாயசம் என்று அமர்க்களப்பட்டது. செய்தி கேள்விப்பட்டு உள்ளூரிலிருந்தும், பக்கத்து கிராமங்களிலிருந்தும் சாரிசாரியாக மக்கள் வந்த வண்ணமிருந்தனர். மாசி மாத அறுவடை மும்முரமாய் நடந்து கொண்டிருந்த நேரம். களத்திலிருந்தபடியே மிரசுகளும், விவசாயிகளும், தொழிலாளர்களும் வந்தனர். ஒரு மூதாட்டி மடியில் கட்டி வந்த னத கூலி நெல்லை சுவாமியின் முன் சமர்ப்பித்து தெண்டனிட்டார். இளநீரும், வாழைத்தாருமு“, வெள்ளரிப் பிஞ்சும், நார்த்தங்காயும், எலுமிச்சம் பழங்களும், தாமரைப் பூவுமாய் மக்கள் கொண்ட வந்த காணிக்கைகளால் திண்ணை நிறைந்துவிட்டது.

“பெரியவா எங்க வீட்டு பாகப்பிரிவினைல சிக்கல், சரி பண்ணணும்? பொண்ணுக்கு கல்யாணம் திகையலை; அனுக்கிரகம் பண்ணணும்!’
புது வீடு கட்ட ஆரம்பிச்சு மனைபோட்டதோட அப்படியே நிக்கறது. மேக்கொண்டு ஒரு செங்கல் வைச்சு கட்டலை, கட்டிமுடிக்க பெரிவத அனுக்கிரஹிக்கனும்.

வடக்க இந்து முஸ்லிம் கலவரம் சதா நடந்திண்டிருக்கு; ஒயரதே இல்லை; ரத்த வெள்ளம்தான்; அமைதியே இல்லை. அமைதி உண்டாக பெரயவா தான் மனசு வைக்கணும்.

நம்ம ஊர்லயே மதமாற்றம் நிறைய நடக்க ஆரம்பிச்சாச்சு. சிலுவைக்கு பாதி, மசூதிக்கு பாதின்னு நிறைய மனுஷா மாறிண்டிருக்கா, தடுத்து நிப்பாட்டணும். ஏதாவது வழி ஊர் மக்கள் கொட்டித் தீர்த்தார்கள்.

வீட்டு பிரச்சனையிலிருந்து, ஊர் பிரச்சனை, சமூகப் பிரச்னை, தேசப் பிரச்னை வரை வகை வகையாக ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்கள். புழுக்கத்தாலும், வேண்டுதலாலும், பேராசையாலும், யாகத்தாலும், அத்திண்ணையே இறுக்கமாய் இருந்தது. சாது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டது மௌனமாய். விருப்பப்பட்டால் ஒரு பூவோ, ஒரு துளசி விள்ளலோ, ஒரு எலுமிச்சை பழத்தையோ எடுத்துக் கொடுத்தது. சிலருக்கு அதுவும் கிடையாது. ஆனால் யாருக்கும் ஒரு வார்த்தை வாய் திறக்க வில்லை. இடையில் மாலியை சைகை செய்து கூப்பிட்டார். லிங்க வடிவில் அபினயம் செய்து கோபுர வடிவில் கைகளை உயர்த்தி எங்கே? என்று வலது கை மடித்துக் கேட்டார்.

மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் மௌனமாய் நின்றனர். மாலி கற்பூரமாய் புரிந்து கொண்ட கூட்டத்தைப் பார்த்து கேட்டார்.

“இந்த ஊரில் சிவன் கோவில் எங்க இருக்கு?’ கூட்டம் விழித்தது; ஒருவருக்கும் தெரியவில்லை, “இந்தூர்ல ஒரு அய்யனார் கோயில், ஒரு மாரியம்மன் கோயில், ஒரு பெருமாள் கோயில், நத்தம் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இதுதான் உண்டு; சிவன் கோயில் இல்லையே?’ என்றார் தொன்னூரு வயது ரெங்கண்ணா. அவருக்கே தெரியவில்லை என்றால் இங்கே வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை, பரப்பிரம்மம் மீண்டும் ஏதோ சைகை செய்தது.

“இல்லையே’ இருந்திருக்கு நிச்சயமா தெருவின் மேல் கோடீல பெருமாள் கோவில் இருந்தா கீழ்க்கோடீல கண்டிப்பா சிவன் கோவில் இருந்திருக்கணுமே!

இருந்தது! கண்டிப்பா இருந்திருக்கு?

பதில் சொல்லத் தெரியாமல் கூட்டம் விழித்தது. குழப்பமான மௌனம் நிலவியது அங்கே. சிவன் கோவில் எங்கே, எப்பொழுது, இப்பொழுது எங்கே எப்படி? என்று யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதுதான். லத்திஃப்பாயும், அவர் மனைவி மெகருன்னிசாவும் வந்தனர். கொண்டு வந்திருந்த பேயன் பழம் இரண்டு சீப்பையும், கொழுந்து வெற்றிலை ஒரு கவுளியையும் அப்பொழுது தான் பறித்த இரண்டு ரோஜாப் பூக்களையும் சுவாமி முன் வைத்து வந்தனம் செய்தனர்.

தாமரைக் கண்கள், வந்தவர்களை பாதாதி கேசம் உற்றுப் பார்த்தது; ஊடுருவிப் பார்த்தது. ஆசிர்வதித்தது; குளிறப் பண்ணிற்று. லத்திஃபும், அவர் மனைவியும் மெய்மறந்து நின்றனர். பின்னர் ஒருவாறு சுதாரித்து, திக்கித்திணறி அவர் கோர்வையற்று சொல்லிய விஷயத்தின் சாராம்சம் இதுதான்.
“நேற்று கொல்லைப்புறம் செத்தி, கொத்திய பொழுது மண்வெட்டியில் ஏதோ தட்டுப்படடது. கடப்பாறையைக் கொண்டு ழத்தோண்டி பார்த்தபொழுது பெரிய சிவலிங்கம் ஒன்று தட்டுப்பட்டது. அடுத்தடுத்து தளவரிசை, படிந்து போன கருங்கற் தூண்கள், பின்னால் பாழடைந்த கிணறு என்று ஒவ்வொன்றாய்த் தட்டுப்பட்டது; எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, ஒரே கலக்கமாகவும், கலவரமாகவும் இருந்தது. என்ன செய்றது அல்லாவே!ன்னு ராத்திரி முழுக்க விசனப்பட்டு உட்கார்ந்திருந்த போதுதான் பெரியவர் வந்திருக்கும் செய்தி வந்தது; இதற்குமேல் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் தான் கூற வேண்டும்.’

லத்திஃப் சொல்லச் சொல்லக் கூட்டம் மெய்மறந்து உட்கார்ந்திருந்தது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் சிவன் கோயில் அங்கு இருந்திருக்கிறது. காலப்போக்கில் கவனிப்பாரில்லாது சிதிலற்று மண்ணுள் புதைந்து மறைந்து விட்டது. நில ஆக்கிரமிப்பால் அடைக்கப்பட்டு, பலகை மாறி, கடைசியில் லத்திஃப்பாய் கைக்கு வந்து இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
“எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களை சாகுபடி செய்யும்பொழுது கூடவே கோவில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக; நெல் அளக்கும் போது ஒரு மரக்கால் கூட குறையாம அளப்பாக சிவ சொத்து குல நாசம்ன்னு சொல்லி அல்லா சாட்சியா அத்தனை நேர்மையா அளப்பாக எனக்கும் அதே தர்ம புத்தி நியாபுத்தி உண்டு; அப்படியும் பொறந்த ஒத்த பொம்பள புள்ளையும் மனவளர்ச்சி இல்லாததாவே இருந்தது. குமருவாயி பத்து வருஷத்துக்கு முன்ன செத்து போச்சி. அறியாம செய்த பாவத்துக்கே அந்த கூலி; தெரிஞ்சும் பாவம் செய்ய மனம் ஒப்பலை. மனசார எழுதித்தர்ரேன் எனக்கு பறம் பைசா வேண்டாம். சுயநினைவோட, சுத்த மனசோட தர்ரேன்; பழையபடி அங்க சிவன் கோவில் கட்டிக்குங்க. ஊர் ஜனத்துக்கு பயன்பட்டா அதவே அல்லாவை சந்தோஷப்படுத்தும். இந்தாங்க கோவில் கட்ட எங்களால் ஆன் பணம் 101. இதை முதல் வரவா வச்சிகிங்க!’ என்று வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து அவர் கொடுத்த பொழுத கூட்டத்தில் எல்லோருக்கும் உடம்பு சிலிர்த்தது. இரு உதடுகளையும் அழுந்த மூடிக் கொண்டிருந்த ஞானி, அடுத்து சைகையால் கேட்டதை அவரது அணுக்க தொண்டராலும் விளக்கிக் கொள்ள இயலவில்லை. படிக்கும் பையன்களிடமிருந்து ஸ்லேட்டும், குச்சியும் தருவிக்கப்பட்டு பெரியவாளிடம் கொடுக்கப்பட்டது.

“மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று எழுதிக் கொடுத்ததை கூட்டத்திடம் காட்டினார் வைத்தா. அவர்கள் மலங்க விழித்தனர். பின்பு ஸ்லேட் லத்தீஃப் தம்பதியை நோக்கித் திரும்பியது.

“இன்னும் இல்லை; பாவியாகத்தான் இருக்கோம். அதுக்குண்டான வசதியை இன்னும் அல்லா எங்களுக்குக் கொடுக்கலை. பல வருஷமா எத்தனையோ முயற்சி பண்ணியும், மெக்காமதீனா போறது இன்னைக்கு வரைக்கும் கனவாத்தான் இருக்கு!’ இதைச் சொல்லம் பொழுது லத்தீஃப்பாய் மனைவியின் குரல் தழுதழுத்தது. பெரியவா வைத்தாவைப் பார்த்தார். பார்வையின் பொருள் புரிந்த வைத்தா கூட்டத்தைப் பார்த்து, “இந்த உயர்ந்த மனிதர்களிடமிருந்து கோயில் கட்ட இடத்தை இனாமா வாங்கிக்கறேளளே? பிறதியா, நாம ஒண்ணும் செய்யவாண்டாமா அவாளுக்கு?’

பரபரவென்று யோசித்து, சடாரென்று முடிவு செய்து, “அவங்க புனிதப் பயணம் போய் வர்ர செலவு அத்தனையும் எங்களோடுது?’ ஏகமனதாய் கூட்டம் சொல்ல திண்ணையில் அமிர்தம் நிறைந்து வழிந்தோடியது, லத்தீஃப் தம்பதி நெஞ்சில் கைவைத்து சிரம் தாழ்த்தி நன்றி நவின்றனர். கண்களில் நீர் வழிந்தது.

ஞானி தாமரைக்கண்களால் எல்லோரையும் ஆசிர்வதித்தார். கூட்டம் மெய் மறந்து விழுந்து வணங்கிற்று. அபயஹஸ்த்தம் காட்டி ஆசிர்வதித்த மகான் எழுந்தார். தண்டத்தை எடுத்துக் கொண்டார். பல்லக்கு அருகில் வர ஏறிக் கொண்டார். யானை, ஒட்டகமெல்லாம் தொடர்ந்து வர பயணம் மீண்டும் திருநாட்டியத்தான்குடி நோக்கிப் புறப்பட்டது. “என்னங்காணும், புரிஞ்சுதா உமக்கு ஏன் இந்தப் பக்கம் திரும்பித்துன்னு?’ என்று வைத்தா பார்வையால் கேட்க, “உணர்ந்தேன்! தெரிந்தேன்!’ என்று மகாலிங்கம் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“ஜெய ஜெய சங்கரா, ஹர ஹர சங்கரா…’ என்று ஜெய கோஷத்தடன் பயணம் புனிதமாய் தொடர ஆரம்பித்தது.

No comments: